Search This SAKRITEASE Blog

Sunday, June 27, 2021

NEET opposing politicians No to quality treatment

 


"NEET" நீட் தேர்விற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல்வாதிகள் தங்கள் சிகிச்சைக்கு மட்டும் உலக தரம் வாய்ந்த மருத்துவர்களை மட்டுமே நாடுவது ஏன் ? தனியார் மருத்துமனையில் அதுவும் வெளிநாட்டினரின் சிகிச்சையை மட்டும் நம்புவது ஏன் ? மருத்துவம் என்பது உயிர் காக்கும் ஒரு துறை.  தங்கள் உயிரை வெல்லம் போல் நினைக்கும்  அரசியல்வாதிகள் அடிமட்ட மக்களின் உயிரை வெறும் கிள்ளுக் கீரையாக மதிப்பது ஏன் ?

எவ்வளவு பொது மக்கள் தங்கள் உறவினர்களுக்கு சரியான சிகிச்சை கிடைக்கவில்லையென்று மருத்துவமனைகள் முன் போராடுகிறார்கள் ???
விக்கிரவாண்டி அரசு மருத்துவமனை சூறை 26.6.2021 தினமலர் செய்தி


 தங்கள் உறவினர்களுக்கு மருத்துவமனைகளில் சரியான சிகிச்சை அளிக்கபடவில்லை என்று பல இடங்களில் பொது மக்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி வரும் செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.  இதற்கு அடிப்படை காரணம் மருத்துவர்களின் தர குறைபாடுகள் தான்.

மனிதர்கள் அனைவரும் எல்லா துறைகளிலும் தேர்ச்சி பெற முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையினில் சிறப்பு திறமை பெற்றிருப்பர். 
அதனால் ஒவ்வொரு நபரும் எந்த துறையில் சிறந்தவர் என்று உறுதி செய்ய தேர்வுகள் அவசியமாகிறது. 

"நீட்" எதிர்பவர்களுக்கு அனைவரிடமும் அவர்கள் மனசாட்சி தொட்டு பதில் சொல்ல வேண்டிய கேள்வி " உங்கள் பிள்ளைக்கு சிகிச்சை அளிக்க எத்தகைய மருத்துவரை நீங்கள் தேர்தெடுப்பீர்கள் ?? உடற் கூறு பாடங்களில் பல பாடங்களை புரிந்து கொள்ள முடியாதவர், 40 சதவிகித மதிப்பெண் மட்டுமே வாங்கியவரை நம்பி உங்கள் குழந்தையின் உயிரை ஒப்படைப்பீர்களா ?"

அவ்வளவு ஏன் ? பள்ளிக் கூடங்களில் ஒட்டப்பந்தயம் என்ற போட்டியே வைக்கக் கூடாது. ஒரு மாணவன் 100 மீட்டர் ஓட வேண்டும் ஒருவர் 60 மீட்டர் ஒடினால் போதும் என்றால் ஒத்துக் கொள்ள முடியுமா ??? இப்பொது நடக்க இருக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் நாம் இப்படி ஒரு சலுகையை கேட்டு பெற முடியுமா ? 

தமிழ்நாட்டை தவிர வேறெந்த மாநிலத்திலும் நீட் தேர்வை எதிர்த்து பெரியதாக அலட்டி கொள்ளவேயில்லை. ஏன் நம்ம ஊர் மாணவர்களே நீட் தேர்வில் நன்றாக தேர்ச்சி பெற்று வருகின்றனர்.

நாமெல்லாம் கடைக்கு சென்று ஒரு 10 ரூபாய் பேனா வாங்கினால் கூட எழுதி பார்த்து விட்டு தான் வாங்குகிறோம்.  ஒரு வெண்டைகாய் வாங்கினால் கூட நுனி உடைத்து விட்டு வாங்குவது ஏன்?  இது போல் சின்ன சின்ன விஷயங்களில் கூட தரம் எதிர்பார்க்கும் நாம், உயிரயே பணையம் வைக்கும் மருத்துவத்துறைக்கு மட்டும் தரம் வேண்டாமா ??

இன்றைய காலக்கட்டத்தில் மருத்துவம் மட்டும் தான் ஒரே படிப்பா ? எத்தனை விதமான விதமான படிப்புகள் உள்ளன. குறைந்த செலவில் ஐஐடி மற்றும் பல உலக தரமான பல்கலைகழங்களிலும் படிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.  இன்று ஆண்ட்ராய்டு போன் வைத்துக் கொள்ளாத கிராமத்து இளைஞனே இல்லை என்ற அளவிற்கு உலகத்தின் எந்த மூலையில் இருப்பவருடனும் தொடர்பு கொள்ளும்  தொழில் நுட்பம் கையில் இருக்கிறது. 

மருத்துவமுறை பற்றிய மாற்று சிந்தனை வரவேண்டிய நேரமிது. அதிலேயும் ஆங்கில நவீன மருத்துவம் மட்டுமே உயர்ந்தது போலவும் மற்ற பாரம்பரிய மருத்துவமுறைகள் ஒரு மாற்று குறைந்தது போலவும் மக்கள் மத்தியில் நிலவும் ஒரு அவல நிலை. பாரம்பரிய மருத்துவமுறைகள் பல்லாயிரம் ஆண்டுகள் நீடித்து வருபவை. அவற்றை படிக்க பல்வேறு வகையான வாய்ப்புகள் இருந்தும் ஆங்கில மருத்துவர்களால் அதிகம் சம்பாதிக்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. மருத்துவ சேவை செய்ய நினைக்கும் பலராலும் மருந்து வியாபார சுழலில் சிக்கி தவிப்பது தான் யதார்த்த நிலை. 
மக்களும் மருத்துவ செலவுகளாலயே வாழ்க்கை முழுவதும் கடனாளியாக வாழும் அளவிற்கு பயந்து வாழ்கின்றனர். அதனால் மக்கள் அனைவருமே உடல் ஆரோக்கியத்திற்கு தொடு சிகிச்சை, யோகா போன்ற எளிய நோய் எதிர்ப்பு அதிகரிக்கும் வாழ்வியலை பின்பற்றி வளமோடு பயமின்றி வாழ வேண்டும்.

தமிழ்நாட்டில் முக்கியமாக  எந்த விஷயத்தில் ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் ஒரே நிலைப்பாடை எடுத்தால் அங்கே அவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும் வியாபாரம் இருக்கிறது என்று நாம் ஒன்றை உணர வேண்டும்.  முதலில் சாராயம்,  இந்த இரண்டு கட்சிகளும் மது விலக்கு கொண்டு வரமாட்டார்கள். சாராய ஆலைகள் அனைத்தும் கட்சிக்காரர்கள் நடத்துகிறார்கள். அது போல தனியார் மருத்துவ , பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் கட்சிக்காரர்களால் மட்டுமே நடத்தப்படுகிறது. 

தமிழ்நாட்டின்  தனியார் இஞ்சினீயரிங் கல்லூரிகளில் கடன் வாங்கி படித்த பல இளைஞர்கள் தரமில்லாத கல்வி கற்றதினால் அந்த கடனை அடைக்க  இந்த  சொமேட்டோ, ஸ்விக்கி, டன்சோ போன்ற பைக் மூலம் டெலிவரி செய்து தான் தங்கள் கடங்களை கஷ்டப்பட்டு வாழ்க்கை நடத்துகிறார்கள். மிகப் பெரிய கனவுகளுடன் அவர்களின் பெற்றொர்கள் இரத்தம் சிந்தி சம்பாதித்தது பொறியியல் படித்தாலே பெரிய வேலை கைநிறைய சம்பளம் என்ற மாயையில் சிக்கி எவ்வளவு குடும்பங்கள் இன்று கஷ்டப்பட்டு வருகிறார்கள். 

 முழுமையான மருத்துவ படிப்பிற்கு அதுவும் நவீன இயந்திரங்களை கையாள்வதற்கு வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் அதற்கேற்ப செலவு செய்ய வேண்டிய அவசியத்திலும் உள்ளனர்.  மிக ஏழ்மையான நிலையில் கஷ்டப்பட்டு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து விட்டாலும் படிப்பு காலம் முழுக்க செலவு செய்ய கடன் வாங்கி மருத்துவராக ஆனாலும் அரசாங்க மருத்துவமனைகளில் சம்பளம் மிக குறைவு.  தனியார் மருத்துவமனைக்குள் சேர வேண்டும் என்றால் அவர்கள் எதிர்பார்க்கும் தரத்தில் மாணவர் இருந்தால் தான் அங்கு வேலை கிடைக்கும். அப்படியே கிடைத்தாலும் மாணவர் மனசாட்சியை விற்று தான் கடனை அடைக்க முடியும். அது நிச்சயமாக மக்கள் சேவையாக இருக்காது. 

டாக்டர் அப்துல் கலாம் போன்றோர் மிக ஏழ்மை நிலையிலிருந்து உயர் பதவிகளை அடைந்தது மிக கடுமையான உழைப்பால் மட்டுமே.  அப்படி உழைக்க விரும்புபவர்கள் மிக எளிதாக எந்த நீட் தேர்விலும் சுலபமாக வென்றுவிடலாம். அரசியல்வாதிகளின் மித மிஞ்சிய செல்வ கொள்கையில் கடன் வாங்கி மாட்டிக் கொள்ளாதீர்கள். 

அப்துல் கலாம் அய்யாவுடனேயே பணியாற்றிய அறிவியல் விஞ்ஞான பேராசிரியர் திரு .பால குருசாமி அய்யா "நீட்" தேர்வு ஏன் அவசியம்" என்று பட்டியல் இட்டுள்ளார்கள்.  அதற்கு அவரை விட ஒரு அறிவு அதிகமாக இருக்கிற "ஏழாம் அறிவு" சூர்யாவை  பதில் சொல்லும் படி அன்போடு கேட்கலாமே. 


5 comments:

Translate

Contact Form

Name

Email *

Message *