Monday, July 4, 2022

பஞ்சாங்கம் விஞ்ஞானமா ???

நம்பியது நாராயணனை போற்றும்



தும்பா நதிக் கரை ஓரம்

தும்பை பூவாய் உனது தீரம்

நம்பி உன்னை இறக்கி விட்டது

விண்வெளி வெகு தூரம்

 

விக்கிரமாதித்தன் வேதாளம்

விட்டும் விடாது வாட்டும்

விக்கிரமால் விரிந்தது உன் வானம்

விகாஸ் எஞ்சின் உன் வெகுமானம்

 


செயற்கை கோள்கள் ஏவினாய்

செயற்கையாய் கோள்கள் கூறினோம்

திரவங்களையே நீ நம்பினாய்

திராவகத்தையே உன்மேல் வீசினோம்

 

மாதவம் செய்தாய் என்று

மாதவன் சொன்னான் இன்று

நம்பாதது ‘நம்பி’யதை தூற்றும்

நம்பியது நாராயணனை போற்றும்

 

பஞ்ச பூதங்கள் கணக்கும்

பஞ்ச அங்கங்கள் கணிக்கும்

வானவியல் என்னும் விஞ்ஞானமே

வானோர்கள் உணர்த்தும் மெய்ஞானமே

 


அணுவின் ஆட்டத்தையும் அளந்தான்

அண்டமே பிண்டமென கண்டான்

ஓரடி வைக்காத மரத்தடி முனிவனும்

மூவடியால் உலகளந்த கறுத்த சிறுவனும்

 

முகமதில் வெண்காடே வளர்ந்தாலும்

கலம் கொண்டு களம் பல கண்டாலும்

காற்றில் போடும் புகை கோலம் தேவையில்லை

பால்வெளியில் எதையும் சாரா பாய் கொண்டு பறக்க

மனவெளியில் விரிசடையன் திருநடனம் காண்பாற் தமக்கே

- களக்காட்டுவிராயர் கிருஷ்ண குமார்


1.7.2022 ராக்கெட்ரி - நம்பி விளைவு -இந்த படம் என்று வெளி வரும் என்று காத்திருந்து - முதல் நாளில் திரையரங்கில் காசு கொடுத்து பார்த்த படம்.  ஒரு விஞ்ஞானி அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு படும் கஷ்டங்களை தாண்டி தன் பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை போக்க அவரும் அவர் குடும்பத்தாரும் படும் சவால்களை மாதவன் குழுவினர் மிக அற்புதமாக கையாண்டு இருக்கிறார்கள்.


இந்த படத்தில் "மங்கள்யான்" என்ற செவ்வாய் கிரக ஆராய்ச்சி கலன் அனுப்ப பஞ்சாங்கத்தை கொண்டு எந்த நேரத்தில் கலத்தை விண்ணில் செலுத்தினால் அந்தக் கலம் மிகக் குறைவான செலவில் குறைவான காலத்திற்குள் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் என்று திரு. நம்பி நாராயணனின்  மருமகன் விஞ்ஞானி திரு. அருணன் கூறுவதாக ஒருக் காட்சி வருகிறது. இதை பற்றி இந்த படத்தின் இயக்குனர் திரு. மாதவன் படம் வெளி வருவதற்கு முன்பே ஒரு பேட்டி அளித்திருந்தார். அதற்கு பகுத்தறிவாதிகள் சிலர் கண்டனம் தெரிவித்ததால் படம் ஓடுவதற்கு ஏதாவது பங்கம் வருமென்று நினைத்தாரோ என்னவோ ? மாதவன் அவரது டிவிட்டை நீக்கிவிட்டதாக செய்தி வந்தது.


திரு. நம்பி நாராயணின் வாழ்க்கையே அவரை ஒரு நாடே தேசத் துரோகி என்று தூற்றிய போதும் , ஆறு மாத காலம் சிறைவாசம் அனுபவித்த பின்பும், மனைவிக்கு மனநிலை பாதிக்கப்பட்டாலும் அவர் நம்பிய உண்மையை அவரின் உண்மை நிலையில் என்றுமே மாறவில்லை என்பது தான் சிறப்பம்சமே. 

அத்தகையதொரு வாழ்க்கை சரித்திரத்தை ஐந்து வருட காலமாக உயிர் மூச்சாக சுவாசித்து காதலித்து நடித்திருக்கும் மாதவன் , பஞ்சாங்கத்தின் மேன்மையை அதை பயன்படுத்தி வெற்றிக் கொண்டவர்கள் பக்கத்திலே இருந்தும் பின் வாங்கியுள்ளது ஆச்சரியபடுத்தியது. அதனாலேயே இந்த பதிவு எழுத தூண்டியது.

பஞ்சாங்கம் என்பது ஏதோ பிராமணர்கள் பூஜை செய்வதற்கும், கல்யாணம் மற்றும் வீட்டில் நடக்கும் சுப விசேஷங்களுக்கு நல்ல நேரம் பார்க்க ஒரு சம்பிரதாயமான ( போலி நாத்திகர்கள் வார்த்தையில் கூறினால் பகுத்தறிவில்லாத , விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்ட, மூட நம்பிக்கையின் ஊன்று கோலாக ) சடங்காக நாட்காட்டியாக பார்க்கப்படுகிறது.

ஆனால் பஞ்சாங்கம் என்பது முழுக்க முழுக்க வான வெளியில்  இயங்கும் அனைத்து கோள்கள் , கிரகங்கள் இயங்கும் வேகத்தை அவைகள் பூமியின் ஏற்படுத்தும் தாக்கத்தை துல்லியமாக கணக்கிட்டு கால கணக்குகளை வருடா வருடம் தமிழ் வருடப் பிறப்பின் அடிப்படையில் வெளியிடப்படுகிறது. 


விவசாயத்தில் கூட "மேல் நோக்கு நாள்" :கீழ் நோக்கு நாள்" குறிப்பிடப் பட்டு எந்தெந்த பயிர் எந்த நேரத்தில் விதைக்கப்பட வேண்டும் எந்த நேரத்தில் ஊட்டம் கொடுக்க வேண்டும் என்று இந்த விஞ்ஞான ரீதியாக பயன்படுத்துகிறார்கள்.  இந்த நாட்களை பற்றிய கணக்கிற்காக, நிலா பூமியை எந்த வேகத்தில் சுற்றுகிறது, அதன் சுற்றுப் பாதையில் பூமியிடமிருந்து விலகும் போக போக என்ன வேகம் எடுக்கிறது பூமி அருகில் வர வர என்ன வேகத்தில் வருகிறது என்று அதன் வேக மாறுபாட்டை கூட மிக துல்லியமாக அளந்து தெரிவிக்கிறார்கள் இதனை இயற்றும் வைதிகர்கள். 

இந்த வைதிகம் எனும் கலையில் அனைத்துமே வானவியல் கணக்கின் அடிப்படையில் தான் அமைகிறது. இதில் மக்களுக்கு சந்தேகம்  அல்லது அவ நம்பிக்கை வருவதே இந்த வைதிகர்கள் இந்த கிரகங்களின் நிலைபாட்டை வைத்து ஜோதிடம் என்னும் கலையில் எதிர்காலம் போன்றவற்றை கூற முற்படும் போது ஏற்படும் கணக்கும் பிழை மற்றும் ஜோசியங்கள் சொல்லுவதற்கு முன் கடைப்பிடிக்க பட வேண்டிய சில வழி முறைகளில் கடைப்பிடிக்கபடாமல் கூறுவதால் அவர்கள் கூறும் பலன்கள் சில சமயம் சொல்லிய படி நடப்பதில்லை.

எத்தனையோ விஞ்ஞான முன்னேற்றத்தில் கண்டுபித்தாக கூறப்படும் கருவிகளை கொண்டு பல முறை தவறாக மருத்துவம் பார்க்கப்பட்டு பல மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு காரணம் மருத்துவர்கள் திறமை தானே தவிர மருத்துவம் எனும் விஞ்ஞானத்தின் குறையில்லை. அது போலவே முழுமையாக தன்னை தயார் படுத்திக் கொள்ளாமல் தன் மனம் போன போக்கில் சில ஜோதிடர்கள் கூறிவிடுவதால் மக்களுக்கு ஜோதிடம் மீதும் அவர்கள் பயன்படுத்தும் பஞ்சாங்கங்கள் மீதும் அவநம்பிக்கை வந்து விடுகிறது. மருத்துவம் போலவே, ஜோதிடம், வானவியல், பஞ்சாங்கம் அனைத்தும்  விஞ்ஞானமே.  

மிக துல்லியமாக ஜாதகத்தை பார்த்து சொல்லக் கூடிய நல்ல அனுபவ்மிக்க ஜோதிடர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு ஜாதகத்தை பார்த்தால் பல கணக்குகளை மனக் கணக்காகவும் சிலர் கைகளிலும், சிலர் எழுதியும் போட்டு பார்த்தபின்பு தான் பலன்களை கூறுவர். விரைவு உணவு உண்பவர்களுக்கு ஆரோக்கியமற்ற உணவு படைக்கும் தரம் குரைந்த சமையற் கலைஞரை போல், இந்த வேக காலத்தில் பல ஜோதிடர்கள் வேகமாக பலன் சொல்லப் போக ஜோதிடம் என்னும் விஞ்ஞான கலை மற்றும் பஞ்சாங்கங்கள் மீது பழி விழுகின்றது.

ஒரு வருடத்திற்கு முன்பே வெளியிடப்படும் பஞ்சாங்கங்களில் மிக துல்லியமாக அமாவாசை, பௌர்ணமி, போன்ற அன்றாட திதிகள் சரியாக எத்தனை நிமிடத்தில் ஆரம்பித்து எத்தனை மணி எத்தனை நிமிடத்தில் முடிகிறது என்று தெளிவாக குறிப்பு தருகிறார்கள். தினம் தினம் சூரிய உதயம் , மறைவு, நிலா ஒளி பிறப்பு மறைவு அனைத்தையும், இந்தந்த நாளில் இந்தந்த ஊரில் சந்திர, சூரிய கிரகணங்கள் பிடிக்கு எந்தெந்த ஊரில் தெரியும் என்பதை மிக துல்லியமாக கணக்கிடுகிறார்கள். இவை அனைத்துமே இயற்கையின் ஒவ்வொரு நடப்பும் ஒரு கணக்கின் படியே நடப்பதால் இதனை ஆண்டு அனுபவித்தவர்கள் தங்கள் அனுபவத்தை அழகான கணக்காக விட்டுச் சென்றுள்ளனர்.

பண்டைய தமிழர்களின் விஞ்ஞான முன்னறிவிற்கு எடுத்துக் காட்டு "சிவப்பு" நிறத்தில் இருக்கும் ஒரு கிரகத்திற்கு "செவ்வாய்" என்று பெயரிட்டு அதனை வழிபட்டு இயற்கையை போற்றி வாழ்ந்துள்ளனர் என்பது புலனாகிறது.

அப்போது பண்டைய தமிழர்கள் ராக்கெட் வைத்திருந்தனரா ?? செயற்கை கோள் வைத்திருந்தனரா ?? என்ற விஞ்ஞான முன்னேற்றம் அடைந்திருந்தனரா ? என்ற கேள்வி எழுகிறது. ஆனால் ஆதித் தமிழர்கள் மெய்ஞானம் என்னும் உள் மன விஞ்ஞானத்தில் தேர்ந்தவர்களாக இருந்ததால் இந்த பரு உடலை ஒரு கருவியாக்கி பிரபஞ்சத்தில் உள்ள பல நிகழ்வுகளை அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே உள்வாங்கிக் கொள்ளும் திறன் பெற்றிருந்தனர்.



இதனை புரியவைக்க , இன்றைய காலக்கட்டத்திலும் பூமியில் எங்கு நீரோட்டம் இருக்கிறது என்று கண்டுபிடிக்க சிலரால் மட்டும் தன் உடம்பில் இயங்கும் காந்த அலைகளை அந்த நீரின் காந்த அலைகளை கண்டுபிடிக்க பயன்படுத்த முடிவதிலிருந்து தெரிந்துக் கொள்ளலாம். எல்லா மனித உடல்களிலும் உயிர் இருக்கும் வரை இரத்தம் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. அதனால் காந்த சக்தியும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் எல்லோராலும் நீரோட்டத்தை கண்டுபிடிக்க முடிவதில்லை. அதனால் அதனை ஒரு மூட நம்ப்பிக்கையாக பார்க்கிறோம். ஆனால் அதுவும் விஞ்ஞானமே.




இதனையே சித்தர் பெருமக்கள் மிக எளிமையாக " அண்டமே பிண்டம் பிண்டமே அண்டம்" என்று மிக எளிமையாக விளக்கியுள்ளனர். அதாவது இந்த அண்டத்தின் அனைத்து தன்மைகளையும் இந்த பரு உடலிலும் இருக்கிறது. அதனால் இந்த பரு உடலை உள்ளுணர்வால் உணரக்கூடிய தன்மை பெற்றவர்களுக்கு இந்த பேரண்டித்தில் உள்ள அனைத்தையும் உணர முடியும். 


அதனாலேயே அன்றைய சித்தர்கள் பூத உடலால் செவ்வாய் கிரகத்திற்கு செல்லாமல் தமது சூட்சம உடல் மூலமாக செவ்வாய் கிரகத்தின் தன்மைகளை உணர்ந்து அதனை மிகத் தெளிவாக செவ்வாய் என்று கூறியதன் மூலம் உணரலாம்.

சைவ மதத்தின் நாயன்மார்களில் ஒருவரான மாணிக்க வாசக பெருமான் மிகத் தெளிவாக சிவலோகம் எனப்படும் உன்னத நிலையை அடைய தமிழ் சொற்களின் அமைப்பின் மூலமே "சிவத்தன்மையை" உணர்த்துகிறார். வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் மிக எளிமையாக எது சிவம், அந்த நிலை உணர இந்த பரு உடலை எப்படி பயன்படுத்த வேண்டும், மன நிலையை எப்படி வைத்து கொள்ள வேண்டும் என்று தாங்கள் அனுபவித்ததையே பாடல் வடிவில் விளக்கமாக விளக்கியுள்ளனர். 

நாம் இன்றைய காலக் கட்டத்தில் மனித உடலுக்கு புறத்தில் உள்ள கருவிகளை கொண்டே இந்த கிரகங்களை அணுக முடியும் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். அந்த புற கருவிகளை வடிவமைப்பவர்களே விஞ்ஞானிகள் என்று வியந்து வருகிறோம். ஆனால் இந்த பரு உடலால் உணர முடியாத தன்மையிலும் பிரபஞ்சத்தின் இயக்கங்கள் பலவற்றை அனுபவித்து இயற்கை வழங்கியுள்ள உடலை கொண்டே உணர வழிச் சொல்லி சென்றுள்ளனர் உண்மையான விஞ்ஞானிகள் மெய்ஞானிகளே. 


ஐரோப்பிய அணு ஆராயச்சியில் நடராஜ சிலை - அணுவின் ஆட்டத்தை விளக்கும் விதமாக


சகிருட்டிஸ்

Sakritease 

July 2022


Translate

Contact Form

Name

Email *

Message *