இராஜாஜியும் காமராஜரும் கல்வியும் |
இன்று கர்மவீரர் காமராஜர் அய்யாவின் 118 வது பிறந்தநாள். அய்யா வாழ்ந்து காட்டி வழிக்காட்டிய வழியை பின்பற்றுவோம். தமிழ்நாட்டில் கல்வி பரவலாக காமராஜரின் பங்கு அளப்பரியது.
அதே சமயம் தீர்க்க தரிசி திரு. இராஜாஜி அவர்களை பலரும் குறைத்து எழுதுவது சிறப்பன்று. அவர் ஒரு
சிறந்த கல்வித் திட்டத்தை முன் மொழிந்தார்.
மாணவர்கள் பள்ளிக் கல்வியை தாண்டி தங்கள் பெற்றோர்களிடமும் உள்ள சிறப்பு திறன்களை கற்க வேண்டும் என்பதற்காக பள்ளிக் கல்வி காலையிலும் தொழிற் கல்வி பிற்பகலில் கற்க வேண்டும்
என்பது திட்டம். இது முக்கியமாக மாணவர்கள் தன்னம்பிகையுடன் தற்சார்பு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக.
அவரின் கல்வித் திட்டத்தை பற்றி தமிழ்
விக்கிபீடியாவில் (https://ta.wikipedia.org/wiki/மாறுபட்ட_தொடக்கக்_கல்வித்_திட்டம் ) உள்ளது அப்படியே இங்கே :
திட்டம்
1952 இல் சென்னை மாநிலத்தில் படிப்பறிவு கொண்டவர் 21 சதவிகிதம் மட்டுமே. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறியுள்ளபடி அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வி அளிப்பது மத்திய, மாநில அரசின் கடமையாகும். சென்னை மாநிலத்தில் மட்டும் இதற்காக வருடம் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு தேவைப்பட்டது. ஆனால் அரசால் ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் கல்விக்காக ஒதுக்க முடியவில்லை. எனவே ராஜகோபாலாச்சாரியின் காங்கிரசு அரசாங்கம், செலவில்லாமல், அதிக குழந்தைகளுக்கு பள்ளிக் கல்வி அளிக்க ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்தது. திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
1.
பள்ளி வேலை நேரம் இரு நேர முறைகளாகப் (shift) பிரிக்கப்படும். ஒவ்வொரு நேர முறையும் மூன்று மணி நேரம் கொண்டது.
2.
மாணவர்கள் ஒரு நேரமுறை மட்டுமே பள்ளியில் ஆசிரியர்களிடம் பாடங்கள் கற்பர்.
3.
இரண்டாவது நேரமுறையில் மாணவர்கள் தங்கள் தந்தையரிடமிருந்து அவர்களது தொழிலைக் கற்பர்; மாணவிகள் தங்கள் தாயார்களிடமிருந்து சமையல் மற்றும் வீட்டு வேலைகளைக் கற்பர்.
4.
இத்தகு தொழில்கள் (கைவினை மற்றும் வேளாண்மை) செய்யும் பெற்றோர்கள் இல்லாத மாணவர்கள், இரண்டாம் நேர முறையை வேறொரு தொழில் செய்பவருடன் கழிக்கலாம்.
5.
இரண்டாம் நேர முறையில் தொழில்களைக் கற்பது தவிர மாணவர்கள் தமது ஊர்களில் பொதுப்பணிகளில் – கட்டிடங்கள் கட்டுதல், தூய்மைப்படுத்தும் வேலைகள், சாலைகளைச் செப்பனிடுதல் – ஈடுபடுத்தப்படுவர்
6.
இரண்டாம் நேரமுறைக்கு வருகைப்பதிவேதும் கிடையாது.
இத்திட்டம் முதலில் 1953-54 கல்வியாண்டில் கிராமப்புற பள்ளிகளில் மட்டும் அறிமுகப் படுத்தப்பட்டது. அதை படிப்படியாக மாநிலம் முழுவதும் 35000 பள்ளிகளில் அமல்படுத்த அரசு திட்டமிட்டது.
இராஜாஜியின் கொள்கையை பல மேலை நாடுகளில் அற்புதமாக பின்பற்றி அவர்கள் விஞ்ஞான முன்னேற்றத்தில் பல மடங்கு நம்மை விட அதிக கண்டுபிடிப்புகளை கொண்டு வரச் செய்தது. மேலை
நாடுகளில் ஒருங்கிணைந்த அமெரிக்கா, ஜெர்மனி, பின்லாந்து , நார்வே போன்ற பல
நாடுகளில் மாணவர்களின் மனப்போக்கிற்கு ஏற்றவாறு அவர்களுக்கு அழுத்தமில்லாமல்
வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்கபடும் போது அற்புதமான கண்டுபிடிப்புகளை
வெளிப்படுத்துகின்றனர். இன்று நம்ம் ஊர்
மாணவர்கள் பலரும் வெளினாடுகளுக்கு சென்று மேல் படிப்பு படிக்கும் போது அவர்களுக்கு
தன்னம்பிக்கையும் எதையும் ஆராய்ந்து பார்த்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்து
அவர்கள் பலரும் சாதித்து வருகிறார்கள்.
கல்வியை பற்றி புரிதல் அவசியம். கல்வி என்பது பள்ளியில் ஆரம்பிப்பதில்லை, குழந்தைகள் பிறந்த முதலே அவர்களின் கிரகிக்கும் திறன் மூலம் கற்றுக்கொள்கிறார்கள். தாயும், தந்தையுமே முதல் குருவாவார்கள். அவர்களிடமிருந்து கற்றால் தான் பிள்ளைகள் பெற்றோரை மதித்து போற்றுவர். இன்றைய தமிழக
நிலைமை என்ன ஒரு விவசாயியின் மகன் விவசாயத்தை வெறுக்கிறார். அதனால் அவர் தந்தையை
மதிப்பதில்லை. விவசாயி நிலம் விற்ற காசைக் கொண்டு தனியார் பொறியியல் கல்லூரியில்
படிக்க வைத்து அந்த மகனோ / மகளோ ஒரு குமாஸ்தா வேலைக்கு லாயக்கற்றவர்களாக ஆக்கி
விட்டது கல்வி முறை. இயற்கை வேளாண்
விஞ்ஞானி நம்மாழ்வார் சுவரில்லாத பள்ளிக் கூடம் என்பதே உண்மையான கல்வி முறை என்று
அடிக்கடி வலியுறுத்துவார். இயற்கையிலிருந்து இயல்பாகவே கற்க வேண்டும் , முடியும்
என்பதை தன் வாழ்நாள் முழுவதும் பரப்பினார்.
இன்றைய நிலைமை என்ன? குழந்தைகள் ஒழுங்காக படிக்கவில்லையென்றால் உடனே ஆசிரியர் நோக்கி கை நீள்கிறது. இது தவறானது. பிள்ளைகள் கற்பிப்பதில் பெற்றோரும் பங்கு பெற வேண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்பதே இராஜாஜியின் அடிப்படை தத்துவம்.
அன்று இராஜாஜியை காமராஜர் உட்பட பலரும் எதிர்த்தனர்.. திமுக அதனை குலக் கல்வி முறை என்று மிகவும் பழித்தது.
காமராஜரின் அரசு கொண்டு வந்த பகலுணவு திட்டம்
மூலமாகத்தான் வறுமையின் எல்லையில் இருந்த பலரும் உணவிற்காகவாவது பள்ளியில்
ஒதுங்கினர். அவரின் நீர் மேலாண்மை
திட்டங்களினால் பல ஊர்களுக்கும் அணைகள் மூலமாக பயன் பெறுகின்றன. தொடங்கிய பல தொழிற்சாலைகளும் மக்களுக்கு வேலை
வாய்ப்பை வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டின் நலனில் மிகுந்த அக்கறையுடன் இருந்த இரு
பெரும் ஆளுமைகளான இராஜாஜியும் காமராஜரும் தனிப்பட்ட முறையில் பல கருத்து
வேறுபாடுகள் இருந்தது நமது நாட்டிற்கும் அவர்கள் இருவரின் அரசியல் வாழ்க்கைகும்
பெரிய தடைகற்களாக போய்விட்டது.
உண்மையில் அவர்கள் இருவரின் கல்விமுறைக்கும் ஒரு
இடைப்பட்ட கல்விமுறை , இருவரின் சிறந்த கொள்கைகளின் இணைந்து
கொடுக்கப்பட்டிருந்தால் தமிழகம் தரமான கல்வியில் ஒரு உன்னத நிலை அடைந்திருக்கும்.
நமது பாரம்பரிய தொழில்கள் அனைத்தும் நமது முன்னோர்களின் மேன்மையை இன்று
பறைசாற்றிக் கொண்டிருக்கும். விவசாயி
மேலும் வளமாக விவசாயம் செய்திருப்பார்.
ஆனால் இன்று விவசாயத்தை விட்டு கம்பெனி வேலைகளுக்கு வந்தவர்களால் வெள்ளைகார
நிறுவனங்களின் பொருட்களை கூவி வித்து இன்று மண்ணெல்லாம் யூரியாவை பூச்சி
மருந்துகளை கொட்டி மண்ணை மலடாக்கிவிட்டு இப்பொழுது கண்ணை கசக்கி கொண்டிருக்கிறோம்.
காமராஜரின் பிறந்த சமூகமான நாடார் சமூகத்தினரால் தான்
பெரும்பாலான மளிகை கடைகள், துணி கடைகள் வெற்றிகரமாக பல பேருக்கு வேலை வாய்ப்பு
வழங்கி நடந்துக் கொண்டிருக்கிறது. இதனை
நடத்துபவர்கள் பலர் பள்ளி கல்வியை புறக்கணித்தவர்கள். பல்வேறு சிறு தொழில் செய்து வெற்றி கண்டு வரும்
இஸ்லாமிய இளைஞர்கள் பலரும் அதிகம் பள்ளி படிப்பு படிக்க விருப்பமில்லாததால் சொந்த
தொழில் (எ.கா. செருப்புக் கடைகள், பேன்சி
கடைகள் ) செய்து வெற்றி பெறுகிறார்கள். இவர்கள் பள்ளிக் கல்வியை காட்டிலும்
வாழ்க்கை கல்வியினாலும் தன்னம்பிக்கையினாலும் வெற்றிக் கண்டவர்கள். இதே தமிழ்நாட்டில் தான் நாம் இஞ்சினியரிங்
படித்துவிட்டு வேலையில்லாமல் சுற்றிக் கொண்டிருப்போரை பார்க்கிறோம்.
இன்று நமது பொறியியல் கல்லூரி படித்த இளைஞர்கள் சென்டி மீட்டருக்கும் மில்லி மீட்டருக்கும் வித்தியாசம் தெரியாமல் அல்லாடி கொண்டிருக்கும் ஏட்டு சுரக்காய்களே.
இதற்கு நமது அடிப்படையில் உள்ள கோளாறை புரிந்துக்
கொள்ள வேண்டும். பள்ளியிலும்
கல்லூரியிலும் கரும்பலகையில் படிப்பதை மட்டுமே கல்வி என்று நாம் கடந்த 50
ஆண்டுகளாக நம்பத் தொடங்கிவிட்டோம். இந்த இடங்களில் நாம் எழுத்தை மட்டுமே தெரிந்து
கொள்ள பழக்கப்படுகிறோம். பட்டப்படிப்பு
படித்த மாணவர்கள் பலரால் வங்கியில் கடன் பெற்று / அல்லது வேறெங்காவது பணம்
பெற்றாவது ஒரு தொழில் நடத்த முடியும் என்ற நம்பிக்கை பெரும்பாலானவர்களுக்கு இல்லை.
ஏனென்றால் இந்த ஏட்டு சுரக்காய் எழுத்து
அறிந்தவனுக்கு அவன் படித்த படிப்பு ஏதாவது ஒரு நிறுவனத்தில் சென்று கை
நிறைய சம்பளம் வாங்கி பீரோ நிறைய உடுத்தி வாய் நிறைய உண்டு சாலை நிறைக்கும் கார்
வாங்கி சாலையை அடைக்க மட்டுமே பழக்கப் படுத்துகிறது. அது போன்ற வாழ்க்கையை
எதிர்பார்த்து அது அனைவருக்கும் கிடைக்க வாய்ப்பில்லாததால் கடனே என்று பல இலட்சம்
கடன் வாங்கி அதனை அடைக்க வழி தெரியாமல் தாங்கள் விரும்பாத வேலையில் சலிப்புடன் வாழ்பவர்கள்
தான் அதிகம். இதற்கு பலரும் தாங்கள்
விரும்பும் ஒரு கைத் தொழிலாவது கற்றுக் கொள்ளாததே காரணம்.
எந்த ஒரு பொறியியல் கல்லூரிக்கும் செல்லாமல் ஒரு
தூக்கனாங்குருவி கட்டும் கூடு எந்த மனிதனாலும் இயல்பாக செய்ய முடியவில்லை. இந்த
இடைவெளியை இட்டு நிரப்பத்தான் அன்றே
மூதறிஞர் இராஜாஜி முயன்றிருக்கிறார்.
நம்மாழ்வார் இதனையே கற்பித்தல் என்பது ஒரு வழி பாதையாக பார்த்தார். மாணவர் ஆசிரியர் என்ற பிரிவில்லாத இரு
மாணவர்களிடையே கருத்து பரிமாற்றமாக வாழ்ந்துக் காட்டினார்.
( https://www.amazon.in/iyalbe-Engineering-Awakening-engineer-Tamil-ebook/dp/B07886JJN2 )
இன்று கரோனா உலகத்தில் பல இடங்களிலும் கையையும்
காலையும் கட்டிப் போட்டுள்ளது. இந்தியா
முழுவதும் பலரும் வேலையிழக்கும் வாய்ப்பு அதிகம்.
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு வீறுக் கொண்டு எழுந்த ஜப்பான் போல் அனைவரும்
கடினமாக உழைத்தால் தான் வாழ்க்கையை வாழ முடியும். அதற்கு உழைப்பில் கௌரவம் பார்க்காமல் உயர
முயற்சிப்பவர்கள் மட்டுமே ஜெயிக்க முடியும்.
ஆனால் அதற்கு காமராஜரை போல் அதிகம் பள்ளி கல்வி
கற்காதவர்களுக்கே எளிமையாக இருக்கும் என்று தோன்றுகிறது.
தன்னம்பிக்கை தராத கல்வியை படித்தவர்களுக்கு ஏட்டு கல்வி
ஒரு சுமையாக இருக்கிறது. இதை 70
ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்து தான் தீர்க்கதரிசியான திரு. இராஜகோபாலச்சாரியார் பள்ளிக்
கல்வியுடன் தொழிற் கல்வியை இணைத்தார்.
அன்றும் நாம் ஜாதி அரசியல் பேசி அந்த ஞானியையும் அவர் தந்த ஞானத்தையும்
புறக்கணித்தோம்.
இன்று நமது கல்வி அமைச்சரும் அதிகாரிகளும் பின்லாந்து நாட்டிற்கு சென்று அவர்கள கல்வி முறையை கற்றுக் கொள்ள சென்று வருகின்றனர். அவர்கள் நாட்டு கல்வி பற்றி கூறுகையில் அந்த நாட்டு மாணவர்கள் 15 வயது முடிவடைதற்குள் இரண்டு கைத் தொழிலாவது கற்றுக் கொள்கிறார்கள். அதனால் அந்த மாணவர்களால் தன்னம்பிக்கையுடன் ஒரு சுய தொழில் செய்ய களமிறங்குகிறார்கள். அவர்கள் பள்ளி கல்வியை அறிவு வளர்ச்சிக்கு ஒரு அங்கமாக பார்க்கிறார்கள். அவர்கள் குடும்ப பெயர்களில் கூட டெய்லர், வுட்
கட்டர், கார்டர், போர்டர் என்ற தங்கள் தொழில் பெயரை வைத்துக் கொள்வதில் அவர்கள்
கூச்சம் கொள்வதில்லை. நாமோ நமது தந்தையின்
தொழிலை சொல்வதற்கு கூட வெட்கப்படுகிறோம்.
. DIY - do it yourself என்ற தத்துவம் அமெரிக்கா போன்ற நாடுகளில் பிரபலமடையவும் பல விஞ்ஞான வழி கண்டுபிடிப்புகளுக்கும் இராஜாஜி வழி மொழிந்தது
போல் தன்னம்பிக்கை தரும் கல்வித் திட்டங்களே காரணம்.
இதனை உணர்ந்து இந்தியாவிலும் பல நல்ல முயற்சிகள்
நடந்தவண்ணமுள்ளது. அப்துல் கலாம் அய்யா
மாணவர்கள் எப்படி கற்று கொள்ள வேண்டும் என்று தன் வாழ்நாள் முழுவதும்
மாணவர்களுக்கு எழுச்சியூட்டி இருக்கிறார்கள்.
அதே போல் ஆசிரியர்களும் எப்படி கடைசி மூச்சு உள்ள வரையில் தானும் கற்று
மாணவர்கள் கற்றுக் கொள்ள உகந்த சூழ்நிலையை உருவாக்க ஒரு கருவியாக இருக்க வேண்டும்
தன் வாழ்க்கை பயணத்தில் தன்னை செதுக்கிய ஆசிரியர்களை என்றென்றும் நினைவு
கூர்ந்தார்.
“ எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு “
என்ற வள்ளுவர்
வாக்கின் படி பொருளுணர்ந்து வாழ்வோம்.